• Latest articles
மார்ச் 04, 2020
பிரபலமாக்கலாம் மார்ச் 04, 2020

அரண்களும் அழகும் வாய்ந்த செழிப்பான சிற்றூர்தான் நயீன் என்னும் ஊர். இயேசு அவ்வூரை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரோடு திரளான மக்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இயேசு தம் சீடர்களோடும் புதிதாகத் தம்மோடு சேர்ந்தவர்களோடும் பேசிக்கொண்டும் உலாவிக் கொண்டும் வழிநடந்தார்.

அவர்கள் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபொழுது இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். அவர்கள் தங்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்த வண்ணம் வந்து கொண்டிருந்தனர். அந்தப் பாடையில் கிடப்பவன் ஓர் இளைஞன். மணமலர்களும் வெள்ளாடைகளும் படுநேர்த்தியாக உள்ளனவே என்றான் யூதாஇஸ்காரியோத்து.

சுவரின் மறுபக்கமாகச் சவ ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது. பிணத்தின் அருகே ஒரு பெண்மணி விரிதலையோடு அழுத கோலத்தில் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகத்திரை தரித்திருந்தாள். பிணத்தைப் பிடித்திருந்தவர்களுள் ஒருவனின் கால் கல்லில் இடறியதால் பாடையில் கிடந்த பிணம் லேசாக அசைந்தது. அப்போது அத்தாய் அவனிடம் அழுதரற்றிக் கூறினாள்: “கூடாது கூடாது; கவனமாகப் போங்கள். என் மகன் அந்த அளவுக்குத் துன்பப்பட்டவன்”. அவள் தனது நடுங்கும் கையை உயர்த்தி பாடையின் மீது கிடந்த மகனை வருடினாள். பாடையின் பக்கத்தில் தொங்கிக் கிடந்த துகிலின் குஞ்சலத்தை முத்தமிட்டாள். மனமிரங்கிய பேதுருவின் கண்கள் குளமாகின. அவர் மெதுவாக ‘அவள் தான் அம்மா’ என மந்திரித்தார். பேதுருவின் கண்கள் மட்டுமல்ல; அந்திரேயு, யோவான் ஆகியோரது கண்களிலும் நீர் நிரம்பின. எப்போதும் அசராது நிற்கும் தோமாவின் கண்கள் கூடப் பனித்தன. அவர்களின் நெஞ்சம் தவித்தது. யூதாஸ் தனக்குத் தானே சொன்னான்: இறந்தவன் நானாக இருந்திருந்தால் என் தாய் எத்துணை வருந்தியிருப்பாள்!

கருணைக் கடலாகிய இயேசு பாடையின் அருகிலே சென்றார். பிண ஊர்வலம் மயானத்தை நெருங்கியபோது அத்தாயின் ஓலம் விண்ணைப் பிளந்தது. இயேசு பாடையைத் தொட முயன்றார். உடனே இயேசுவின் கைகளை விலக்கிவிட்டு அந்த அம்மா சொன்னாள்: அவன் எனக்குரியவன்! “அம்மா அவன் உங்க பிள்ளைதான், தெரியும்”. ‘அவன் என் பிள்ளை! அவன் எனக்கு நல்லவன். இருந்தும் ஏன் அவன் இறந்தான்? நான் ஒரு கைம்பெண்’. அருகிருந்தவர்களின் ஒப்பாரி கதறலொலியாய்க் காற்றில் கலந்தது. அத்தாய் புலம்பிப் புலம்பி அழுதாள். அழுகையின் தீவிரத்தால் அவள் மூர்ச்சையுற்றாள்.

“அம்மா, அழாதீர்”. இயேசு தம் இடக்கையால் அவளை இறுகப் பிடித்தார். வலக்கையால் பாடையைத் தொட்ட இயேசு, அதைச் சுமந்து வருவோரிடம், பாடையைக் கீழே இறக்கி வையுங்கள் என்றார். அவர்களும் அவருக்குக் கீழ்ப்படிந்தனர். இயேசு, பாடையை மூடியிருந்த கட்டுகளை இழுத்தார். துணிகளை அகற்றினார். மூடாத மேனியுடன் பிணத்தைப் பார்த்த தாய், அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள்; அரற்றினாள். இயேசு இப்போதும் அவளுடைய கையை இறுகப் பிடித்துள்ளார். அவரது கண்கள் தீட்சண்யமுள்ளனவும் ஒளிமின்னுவனவுமாய் உள்ளன. வலக்கையைத் தாழ்த்திய இயேசு சர்வ வல்லமையுடன் உரக்கக் கூறினார்: “இளைஞனே நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு”.

இறந்தவன் அசைந்தான். அவன் கட்டுகளை அறுத்து எழுந்தான். அச்சம் மேலிடக் கதறினான்: அம்மா….

“தாயே இதோ உம் மகன். கடவுளின் பெயரால் இவனை நான் உனக்கு அளிக்கிறேன். அவன் வெளியே வர உதவி செய்யுங்கள்..!”

இயேசு திரும்பி நடக்க விரும்பினார். ஆனால் மக்கள் கூட்டம் அவரை விடவில்லை. கட்டுகளை அறுத்து நீக்கி அவன் தன் அம்மாவைத் தழுவினான். அவள் தனது மேலாடையால் அவனைப் போர்த்தினாள். அவனை ஆரத்தழுவி முத்தமிட்டாள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டார்.

அவரது கண்ணீரைக் கண்ட யூதாஸ், “போதகரே நீர் அழுவானேன்?” என வினவினார்.

இயேசு அவனிடம், “நான் என் அம்மாவை நினைத்துப் பார்த்தேன்” என்றார். இவ்வுரையாடல் அத்தாயின் உள்ளத்தை உசுப்பியது. அவள் தன் மகனுடன் மண்டியிட்டு, “என் மகனே இதோ இங்கு நிற்கும் இத்தூயவரை நீ புகழ்ந்து பாடு; உன் தாய்க்கு மீண்டும் உயிர் தந்தவர் இவரே” என்றாள். அவள் குனிந்து இயேசுவின் ஆடையினுடைய விளிம்பை முத்தமிட்டாள். மக்கள் இயேசுவுக்கும் கடவுளுக்கும் ஓசானா பாடினர்.

(இறை மனித அன்புக்கீதை: திருத்திய பதிப்பு).

'

By: Shalom Tidings

More
மார்ச் 04, 2020
பிரபலமாக்கலாம் மார்ச் 04, 2020

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ‘சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்(லூக். 19:5). இது ஒரு தற்செயலான நிகழ்ச்சியென்று நினைக்கிறீர்களா? அப்படியிருக்க வாய்ப்பில்லை. சும்மா மரத்தில் ஏறி உட்கார்ந்திருந்த ஒருவனை இயேசுவும் சும்மா கூப்பிட்டார் என நினைக்காதீர்கள். லூக்கா நற்செய்தி 19 ஆம் அதிகாரம் 3 முதல் 9 வரையிலான பகுதியை வெகு பக்திசிரத்தையுடன் வாசித்தால்தான் உண்மை புலனாகும்.

இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார். வரிதண்டுவோனாகிய மத்தேயுவை ஆண்டவர் அழைத்து அவரோடு கொண்டு நடப்பதை சக்கேயு அறிந்தார். அவரைப்போல் நானும் ஆக வேண்டும். இயேசுவைக் கண்ணாரக் காண வேண்டும் என உள்ளுக்குள் விரும்பினார் சக்கேயு. சக்கேயு குட்டையாய் இருந்ததால் இயேசுவைப் பார்க்க முடியவில்லை. அவர் முன்னே ஓடிப்போய் அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். வரிதண்டும் ஒரு தொழிலைச் செய்யக்கூடிய நபர் சும்மா போய் மரத்தில் ஏறி ஒளிந்திருப்பாரா? அவர் தமது போர்வையைக் கழற்றியாக வேண்டும். அதாவது தமது படாடோபங்களைத் துறக்க வேண்டும். அவர் உரோமைப் பேரரசின் உயரதிகாரி. இந்தப் பதவியையே அவர் துச்சமாய் மதித்துத் தூக்கியெறிய வேண்டும்! அதற்கப்புறம் தான் மரத்தில் ஏற முடியும்.

மனமறியும் ஆண்டவர்

ஆண்டவர் நம் உள்ளங்களை அறிகிறார். அப்படித்தான் அவர் தம் சீடர்களை அழைத்தார். மாறாக, ஏதோ சில சீடர்கள் வேண்டுமே என நினைத்து கடற்கரையில் வலை கழுவிக்கொண்டிருந்தவர்களையும் அவர் ‘வாங்க, வாங்க’ என்று அழைக்கவில்லை. அவர்கள் யோவானைக் கவனித்தவர்களும் இயேசுவைக் காத்திருந்தவர்களும் ஆவர்.

இரவு நேரங்களில் கடலலைகளைக் கண்ணோக்கி இருந்தவர்களோ, மீனுக்கு என்ன விலை எனத் தேடி நடந்தவர்களோ அல்ல அவர்கள். விண்மீன் மல்கிய விண்வெளியை நோக்கி, ‘மீட்பர் வரும் காலம் எக்காலம்?’ என எதிர்நோக்கி வாழ்ந்தவர்கள்! அதற்காக ஏங்கியவர்கள். ஆண்டவர் அவர்களின் ஏக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

பிலிப்பு, நத்தனியேல் ஆகிய இருவரும் இயேசுவின் வருகைக்காக ஜெபித்துக் கொண்டிருந்தவர்கள். எனவேதான் இயேசு அவர்களைக் கண்டதும் ‘என் பின்னே வாருங்கள்’ எனக் கூறித் தம்மோடு சேர்த்துக் கொண்டார். இயேசு நத்தனியேலைப் பார்த்தபோது, ‘உன்னை நான் அத்திமரத்தடியில் கண்டேன்’ என்கிறார். அங்கே அவர் வாளாவிருக்கவில்லை. இயேசுவின் வருகையைக் குறித்து தியானம் செய்து கொண்டிருந்தார்.

சமாரியப் பெண் இயேசுவிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” (யோவா. 4:25) என்கிறாள். அவளுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த இயேசு “உன்னோடு பேசும் நானே அவர்” என்றார்.

மனமாற்றமடைந்தவர் செய்தது என்ன?

தம்மைக் காத்து மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்திருந்த சக்கேயுவிடம் ஆண்டவர், ‘சக்கேயு விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்’ என்றார். இதைச் சற்றும் எதிர்பாராத சக்கேயு விரைவாக இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். அன்றுவரை தாம் செய்திருந்த தீமைகளை அன்றோடு விட்டுவிடத் தீர்மானித்தார்.

அதன்பின் இயேசுவோடு வழிநடப்பதற்கான தகுதி சக்கேயுவுக்கு வாய்த்தது. இயேசுவைத் தம் வீட்டிற்குக் கூட்டிச் சென்று விருந்தோம்பல் செய்தார். ஒரு பெரிய பணப்பெட்டியை அவரது காலடியில் கொண்டுவந்து வைத்தார். பிறகு அவரிடம், ‘இவையெல்லாம் நான் அநியாயமாய் ஈட்டியவை. இவற்றை இனி நான் வைத்திருக்க மாட்டேன். என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். மீதியை யாரிடம் கவர்ந்தேனோ அவர்களுக்கு நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். பிறகு வந்து நான் உம்மைப் பின்பற்றுகிறேன்’ என்றார். அங்ஙனம் சக்கேயு இயேசுவின் நண்பன் ஆனார்.

இயேசு மீண்டும் எரிக்கோவினூடே நடந்து போனார். அப்போதும் மக்கள் அவருக்கு ஓசானா பாடினர். தங்களுடைய வீட்டிலும் அவர் வரவேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் இயேசுவோ நேராகச் சென்றது சக்கேயுவின் வீட்டிற்கு. மக்கள் அப்போதும் சக்கேயுவை நம்பவில்லை. அவர் மனம் மாறித் திருந்திய பின்னும் அவரைப் பாவியும் வரிதண்டுபவருமாகவே மக்கள் பார்த்தனர். அவர்களின் வீடுகளில் சக்கேயுவை அவர்கள் வரவேற்கவில்லை. எனவே, தமது நண்பனுக்கு இடமில்லாத இடத்தில் இயேசுவும் செல்ல விரும்பவில்லை.

இன்று இயேசு பலரிடமும் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘இறங்கி வாருங்கள்’. உங்கள் மேட்டிமைகளை விட்டுவிட்டுக் கீழிறங்கி வாருங்கள். இயேசுவின் அழைப்பை நாம் செவிக்கொண்ட பின் தன்னலமாகிய பணப்பெட்டியை அப்படியே விட்டுவிட வேண்டும். நமது செல்வமாகிய அன்பை நான்கு மடங்காக நானிலத்தார்க்கு வழங்க வேண்டும். நம்முடைய நேரத்தைப் பயன்படுத்த சமூக அநீதிகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். மனமாற்றம் மட்டுமே போதுமானது அல்ல; அன்பர்களுக்காக உயிரையும் கொடுக்க வேண்டும்.

'

By: Leela Philip

More
மார்ச் 03, 2020
பிரபலமாக்கலாம் மார்ச் 03, 2020

எனது தாய் தந்தையரின் அனுமதியோடு நான் குருமடத்தின் படிக்கட்டுகளில் ஏறினேன். சில மாதங்களுக்குள் குடல்வால் அழற்சி (அப்பென்றிசைட்டிஸ்) என்னும் அரக்கன் எனக்குள்ளே நுழைந்தான். மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப அறுவை சிகிச்சைக்கு உள்ளானேன். சிகிச்சை முடிந்ததும் மூன்றுமாத ஓய்வு. நான் பெட்டி படுக்கையுடன் வீட்டுக்குக் கிளம்பினேன். அப்போது என் நெஞ்சம் விதும்பியது.

நல்லதொரு குருவானவர் ஆக வேண்டுமென்ற எண்ணம் தொடக்கப்பள்ளிக் காலத்திலேயே என் நெஞ்சுக்குள் வேர் விட்டிருந்தது. பள்ளி வாழ்க்கையின் ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் அந்த எண்ணம் இன்னும் ஆழத்தில் வேரோடியது. எப்படியாவது உயர்நிலைப் பள்ளியைத் தாண்டி குருமடத்திற்குள் ஐக்கியமாக வேண்டும் என்பதே என் தீராப் பேரவா.

கல்வாரி மலையில் எனக்காக உயிர்விட்ட இயேசுவின் உடலை நான் என் சிறுவிரல் தீண்டிக் கொண்டாட வேண்டுமென்ற வாஞ்சையில் உள்ளம் பூரித்துக் காத்திருந்தேன். பூவினின் தேனுண்ண வரும் வண்டினைப் போல் ரீங்கரித்துக் குதூகலித்தேன். ஏனெனில் குருவாக வேண்டுமென்ற என் எண்ணம் எனது நாடி நரம்புகளை ஊடுருவி மாமிச மச்சைகளில் சங்கமித்திருந்தது. இந்நிலையில் தான் நான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றதும் வீட்டில் ஓய்வுகொள்ளச் சென்றதும். ஆயினும் மூன்று மாத ஓய்வுக்குப் பின் மறுபடியும் செமினாரியில் நுழைந்தேன்.

எதிர்பாராத வழிகள்

இதற்கிடையில் முதலாண்டு குருமாணவர்கள் நன்றாகப் படித்து முன்னணியில் இருந்தனர். என்னுடைய நண்பர்களோவெனில் இயேசுவும் மாதாவும் மட்டுமே. சில நாட்களுக்குள் என்னை முற்றிலும் துவம்சம் செய்த தீங்கொன்று எனக்கு ஏற்பட்டது.

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து குருமடத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நான் பயணம் செய்த ரயில் விபத்துக்குள்ளானது. என் பின்னந்தலையில் அடிபட்டு ஆழமான ஒரு முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தொடர்ந்து படிப்பதில் இடையூறு ஏற்பட்டது. நான் மீண்டும் ஓய்வெடுப்பதற்காக வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். அந்நாட்களில் நான் என்னையே சபித்தேன். என் இறையழைத்தலின் மீது சந்தேகம் கொண்டேன். மீண்டும் குருமடத்திற்குத் திரும்பிச் செல்வேன் என்ற எண்ணம் என்னைவிட்டு வெகு தூரமாய் இருந்தது.

சில மாதங்களில் என் காயம் ஆறியது. மறுபடியும் குருமடத்திற்குச் சென்றேன். ஆனால் அங்கே என்னைக் காத்திருந்தது படியேற்றம் அல்ல; படியிறக்கம்தான். நான் மீண்டும் ஒன்றாம் வருட மாணவர்களுடன் சேர்க்கப்பட்டேன். அப்போதெல்லாம் என் உள்ளம் மெதுவாக மந்திரித்தது: ‘உன்னை அழைத்தவர் நம்பிக்கைக்கு உரியவர்’ ஆகவே, அஞ்சாதே. “நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும் நிலைத்திருப்பதுமான அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்” (1பேது. 1:23). இந்த இறைவசனம் இப்போதும் எனக்குள்ளே முழங்கக் கேட்கிறேன்.

புதிரான அழைத்தல்கள்

விவிலியம் முழுவதும் புதிர் நிறைந்த விசித்திரமான இறையழைத்தல்களை நாம் பார்க்கிறோம். ஆபிரகாமுக்குக் கடவுளின் அழைப்பு உண்டானபோது ‘ஆண்டவர் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்’ (தொ. நூ. 12:4). கடவுளின் அழைப்புக்குச் சீக்கிரமாகப் பதிலளிக்க அவரால் முடிந்தது. இவ்வாறே கடவுள் மோசேவையும் அழைக்கிறார். ஆனால் அவரால் சீக்கிரமான ஒரு பதிலைக் கொடுக்க முடியவில்லை. “ஐயோ ஆண்டவரே நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ, பேசிய பின்போ நாவன்மை அற்றவன் நான். ஏனெனில் எனக்கு வாய் திக்கும். நாவும் குழறும்” (வி.ப. 4:10). ஆனால் கடவுள் அவரது தடையை நீக்குகிறார். “ஆகவே இப்போதே போ. நானே உன் நாவில் இருப்பேன். நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” (வி.ப. 4:12).

சாமுவேலைக் கடவுள் அழைத்தார். மும்முறை அழைத்தபோதும் அச்சிறுவனால் கடவுளின் அழைப்பை இனங்காண முடியவில்லை. ஆயினும் ஏலி என்ற குருவின் உதவியால் நாலாவது முறை கடவுள் அழைத்தபோது சாமுவேல் கடவுளின் குரலைக் கேட்டான். “அப்போது ஆண்டவர் வந்து நின்று, ‘சாமுவேல், சாமுவேல்’ என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல் ‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று மறுமொழி கூறினான்” (1சாமு. 3:10).

புதிய ஏற்பாட்டில் கடவுள் கன்னிகையாகிய மரியாவை அழைக்கிறார். அப்போது மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார் (லூக். 1:38). இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவரிடம் ‘என்னைப் பின்பற்றி வா’ என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார் (மத். 9:9).

இவ்வாறு கடவுள் பலரையும் பல சூழல்களில் அழைக்கிறார். கடவுளின் அழைப்புக்குச் சிலர் விரைவாக மறுமொழி நல்கினர். சிலரோ காலம் தாழ்த்தினர். காலம் தாழ்த்தியவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. விரைவாகப் பதிலளித்தவர்களே வேதாகம நூல்களில் இடம் பெற்றனர்.

பல்வேறு வழிகள்

நான்கு வகையான வாழ்க்கை முறைகளுக்குக் கடவுள் மனிதர்களை அழைக்கிறார். ஒன்று, குடும்ப வாழ்க்கை. இரண்டு, துறவு வாழ்க்கை. மூன்று, பிரம்மசரியம். நான்கு, குருத்துவம். எந்த வாழ்க்கை முறைக்கான அழைப்பாக இருந்தாலும் பிரமாணிக்கம் தவறாமல் இருக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள் குருத்துவ வாழ்க்கைக்கான அழைப்பையே பெற்றுள்ளனர்.

புனித பிரான்சீஸ் அசீசி கூறுகிறார்: நான் ஒரு தேவதூதனையும் குருவானவரையும் ஒருசேரக் கண்டால் முதலில் வணக்கம் சொல்வது குருவானவருக்கே. புனித ஜாண் மரிய வியானியின் கூற்று இப்படி: எப்போது நான் குருவானவரைக் காண்கிறேனோ அப்போதெல்லாம் நான் இயேசுவைக் குறித்துச் சிந்திக்கிறேன். புனிதர்கள் பலரும் இயேசுவின் மீது கொண்ட அன்பினால்தான் இறையழைப்பை மனமுவந்து ஏற்றனர்.

கிறிஸ்தவப் பெற்றோர்களே இறையழைத்தல்களை ஊக்குவிப்பதில்லை. கிறிஸ்துவின் வாயிலாகக் கடவுள் மேலிருந்து விடுக்கும் அழைப்பென்ற பரிசைப் பெறுவதில் பலரும் மெத்தனமே காட்டுகின்றனர் (பிலி. 3:14). இயேசுவின் அழைப்பை ஏற்று அவரது விருப்பத்தை இப்பூமியில் நாம் நிறைவேற்றுவோம்.

'

By: Br Amal Erumbanth MST

More
மார்ச் 03, 2020
பிரபலமாக்கலாம் மார்ச் 03, 2020

நான் சின்னவனாய் இருந்த காலத்தில் பள்ளி விட்டதும் நேராக வயலுக்கு ஓடுவேன். அங்கே என் அப்பா வேலை செய்துகொண்டிருப்பார். அவருக்குக் கூடமாட உதவியபின் அந்திப் பொழுதில் அப்பாவுடன் வீட்டுக்குத் திரும்புவேன். சோர்ந்து போன கால்களுடன் அப்பாவுக்குப் பின்னே ஒற்றையடிப் பாதைகளில் நடப்பேன். அவ்வப்போது என் அப்பன் திரும்பிப் பார்த்து, ‘மகனே வீட்டை நெருங்கி விட்டோம்’ என்பார்.

இப்போது வயதாகி விட்டது. யாத்திரையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன். என் விண்ணகத்தந்தை நடுங்கும் என் கைகளைப் பற்றிச் சொல்கிறார்: “மகனே நீ நித்திய வாழ்வை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்”. ஆம். இது வானகத்தந்தையின் மதுரமான குரல்!

இறைவாக்கினராகிய தாவீது மன்னன் கடவுளை நோக்கி, “உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர். முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர்” (தி.பா. 73:24) என நயந்து பாடுகிறார். தமது விலைதீராத குருதியால் நம்மை மீட்ட ஆண்டவர், தூய ஆவியால் நம்மை வழிநடத்தி மகிமைக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். “தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார்” (தி.பா. 37:23-24).

தந்தையின் வீட்டில் காத்திருக்கும் ஆண்டவர்

கிறிஸ்தவர்களாகிய பலர் மரணத்தை நெருங்கும்போது முகவாட்டமாய்த்தான் காணப்படுகின்றனர். ஏனெனில் இனி வரப்போகும் விண்ணக மாட்சியைக் குறித்து ஆனந்த பரவசம் அடைய அவர்களால் முடிவதில்லை. மாறாக, இந்தப் பூமியில் இன்னும் சிறிது காலத்தில் கைவிட்டுப் போகக்கூடிய உறவுகள் மற்றும் செல்வ சுகங்களைப் பற்றியே சிந்திக்கின்றனர். பூமியில் உள்ள செல்வங்களை இழப்பதென்பது அவர்களால் முடியாத காரியம். ஆனால் எனக்கு ஒரு கிறிஸ்தவனைத் தெரியும். அவன் சற்று வித்தியாசமானவன். அவனை ஒரு கொடூர நோய் தாக்கியுள்ளதாகவும் அது இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாகவும் மருத்துவர் கூறியபோது சற்றும் பதறவில்லை. மாறாக, மருத்துவருக்கு மனந்திறந்து நன்றி கூறினான். அவன் சொன்னது: “என் வானகத்தந்தை தமது வான்வீட்டில் எப்போது என்னை அழைப்பாரோ என்ற எண்ணத்தால் என் உள்ளம் முறுவலிக்கிறது. உற்றார் உறவினரை இழக்க நேரிடும் வலியைவிட வானகவீட்டின் ஆனந்த மாளிகையே எனக்கு இன்பமாய் இருக்கிறது”.

இருண்ட சிறைக்குள்ளே மரணதண்டனையின் நாளை எதிர்நோக்கி அரண்ட உள்ளத்துடன் இருக்கும் பவுல், நிலை வாழ்வின் பேரானந்தப் பெருநிலையை எண்ணி இறும்பூது அடைகிறார். எந்த நேரத்திலும் மரணம் நிச்சயம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி பொலத் தெரிந்து வைத்திருக்கும் அவர் அதைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மாறாக வானகப் பேரின்பத்தின் பெறற்கரிய பேறுகளை எண்ணி பரவச நிலையை அடைகிறார். “நாங்கள் காண்பவற்றை அல்ல; நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை” (2கொரி. 4:18) எனத் துணிந்து சொல்கிறார் புனித பவுல். தந்தை, மகன், தூய ஆவியாகிய மூவோரிறைவனின் மீது நாம் வைத்திருக்கும் அளப்பரிய அன்பு நமக்கு சாந்தியையும் சமாதானத்தையும் அருளவில்லையா?

இதய வாசலைத் தட்டும் ஆண்டவர்

புனித யோவானுக்கு அருளப்பட்ட திருவெளிப்பாட்டில் ஆண்டவர் அளிக்கும் வாக்குறுதியைக் கவனியுங்கள்: “இதோ நான் கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன்” (தி.வெ. 3:20). ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது நட்பின் அடையாளம். இயேசு நம்மைத் தம் நண்பர்களாய் மாற்றியுள்ளார். அந்நட்பின் அடையாளமாக நம்மோடு அமர்ந்து உணவருந்த விரும்புகிறார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து வந்தவர்தான் பிரசித்தி பெற்ற போதகர் வாள்ட்டர் இன்சண். அவர் பிறந்த இங்கிலாந்து தேசத்தின் ஒரு சிற்றூரில் தமக்கு அறிமுகமாயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். அவர் பெயர் கிரானிபுட். குணவதியும் சீமாட்டியுமான அவரை ஒருநாள் இன்சண் தற்செயலாகச் சந்தித்தார். செல்வது எங்கே என வினவிய போது, வயது முதிர்ந்த ஓர் ஏழை மூதாட்டியைக் காணச் செல்கிறேன் என்றார். அவருடன் அமர்ந்து தேநீர் அருந்த விரும்புவதாகவும் கூறினார். இன்சண் போதகருக்கு அம்மூதாட்டியை நன்றாகத் தெரியுமாகையால், தமது பையிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை எடுத்து அவரிடம் கொடுத்துக் கூறினார்: “அம்மூதாட்டியிடம் தேயிலை இருக்க வாய்ப்பில்லை; தேநீருக்கான தேயிலை இதில் இருக்கிறது!”

கிரானிபுட்டின் செயல் நம்மை உயரிய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. நம் இதய வாசலைத் தட்டும் ஆண்டவருக்கு நாம் நம் நெஞ்சக வாசலைத் திறப்போமானால் நமக்குத் தேவையானவற்றை அவரே கொண்டு வருவார். அவைதான் ஆதிக்காலம் தொட்டே நமக்காக அவர் பேணி வைத்திருக்கும் நலன்கள்! நன்மைகள்!! அவர் உயிர் தரும் உணவு. மீட்பின் திருவார்த்தை, வழியும் வாழ்வும் உண்மையும். அவருடன் அடியற்றி நடப்போமானால் வானக வீட்டில் அவரோடு விருந்துண்போம்.

'

By: Shalom Tidings

More